தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 29,2011) கிழக்கு தாம்பரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்றது.
தமுமுக தலைமை பொதுக் குழுக் கூட்டம் மறுநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி அலாவுதீன் பாகவியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் பொதுக் குழு தொடங்கியது. பின்னர் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி சென்ற 2009 ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற பொதுக் குழு முதல் இந்த பொதுக் குழு வரையிலான செயற்பாட்டு அறிக்கையை சமர்பித்தார். பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். இதன் பின் பொதுக்குழு தீர்மானங்களை தலைமை கழக நிர்வாகிகள் முன்மொழிந்தார்கள். தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமைப்புத் தேர்தல் தொடர்பாக செயற்குழு தீர்மானத்தை முன்மொழிந்து பேச சில செயற்குழு உறுப்பினர்கள் அனுமதி பெற்று பேசினார்கள்.
இதே நாளில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று அக்கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது நன்றியுரை ஆற்றினார்.
மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த இரு பொதுக்குழுக்களும் நடைபெற்றன. பல்வேறு மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்களை வரவேற்கும் வண்ணமையமான வரவேற்பு பலகைகள் காஞ்சி தெற்கு மாவட்டத்தினரால் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாநில மாநாடு போல் 3 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுக்குழு திடல் மக்களால் நிரம்பி வழிந்தது. பொதுக்குழு திடலில் தொழுகை இடம், ஒழுச் செய்யும் வசதி, கழிப்பறை வசதி முதலியவை கச்சிதமாக செய்யப்பட்டிருந்தன. பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி மற்றும் செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் பொதுக் குழு ஏற்பாடு பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் எம். யாகூப், மாவட்ட செயலாளர்கள் யுசுப் சுலைமான். காமராஜபுரம் ஹைதர் மற்றும் மாவட்ட பொருளாளர் சைபுதீன் ஆகியோர் வழிகாட்டலில் மாவட்ட சகோதரர்கள் மிக சிறப்பான முறையில் பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோரின் நிறைவுரைகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பெரும் உற்சாக டானிக் அமைந்தது. உடனடியாக சட்டமன்றத் தேர்தலுக்கான களப் பணிகளை மறுநாளே தொடங்குவது என்ற உற்சாகத்துடன் அவர்கள் கலைந்துச் சென்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தீர்மானம் 1 : ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றுக
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், முஸ்லிம்களுக்கு கேரளாவிலும், கர்நாடகாவிலும் வழங்கப்பட்டது போல தேசிய அளவில் கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜேந்தர் சச்சார் உயர்நிலைக் குழுவும், அதைத் தொடர்ந்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் அமைக்கப்பட்டன. ராஜேந்தர் சச்சார் குழு, இந்திய முஸ்-லிம்களின் அவல நிலையைத் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது. மிகவும் ஒடுக்கப்பட்டுள்ள தலி-த் சமூகத்தை விடவும் மோசமான பின்னடைவில் இந்திய முஸ்லிம்கள் இருப்பதற்கு ராஜிந்தர் சச்சார் அறிக்கை கூறியுள்ளது.
இதற்குப் பரிகாரம் காணும் தீர்வுகளை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் தந்தன. தேசிய அளவில் சிறுபான்மையினருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு, அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் முடிந்த பிறகும் அவற்றை நிறைவேற்றாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலந்தாழ்த்திக் கொண்டிருப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு வலி-யுறுத்துகிறது.
தீர்மானம் 2 : தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு & வெள்ளை அறிக்கை வேண்டும்
முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமுமுக நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக தமிழக அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை வழங்கியது. முஸ்லிம்களின் பிற்பட்ட நிலையை உயர்த்த 3.5 சதவீதம் போதுமானதல்ல என்றாலும், அதை ஒரு துவக்கமாகக் கருதி தமுமுக வரவேற்றது. நன்றி தெரிவித்தது. அதேநேரம் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல், பல்வேறு குளறுபடிகள் செய்யப்பட்டன. இதை அரசின் கவனத்திற்கு தமுமுக எடுத்துச் சென்றது. குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்த பிறகும் குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை. 4.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதை தமிழக அரசு தன் சாதனையாகக் கூறுகிறது. இதில் முஸ்லிம்கள் 3.5 சதவீதம் இடம்பெறவில்லை என்பது வேதனையான உண்மை. தனி இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இந்த 3.5 சதவீத இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப் படுகின்றது என்பதை கவனிக்க கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கோருகின்றது.
தீர்மானம் 3 ; குண்டுவெடிப்பு சதிகாரர்களைக் கைது செய்க
நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்புகளுக்கு சுவாமி அசிமானந்தா போன்ற சங்-&பயங்கரவாதிகள் தான் காரணம் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஸ்ரீகாந்த் புரோகித் போன்றவர்களுக்கெல்லாம் குண்டுவெடிப்புகளில் பங்குள்ளது நிரூபணமாகியுள்ளது. இவரைத் தவிர மேலும் பல பணியாற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு குண்டுவெடிப்பில் பங்குள்ளதும் அம்பலமாகியுள்ளது. எனவே மத்திய அரசு இன்னும் ஆழமான விசாரணை மேற்கொண்டு இந்த பயங்கரவாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், சங்பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு கோருகின்றது.
தீர்மானம் 4: மனித உரிமைப் போராளியை விடுதலை செய்க
சமூகச சேவையாளர், மனித உரிமை ஆர்வலர், உலகப் புகழ்பெற்ற மருத்துவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்குரிய டாக்டர் பினாயக் சென்னுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்ற காரணம் கூறி மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள ஆயுள் தண்டனையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தீர்ப்பு உலகளாவிய அளவில் அறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே இந்திய நீதித்துறையின் மதிப்பை சிதைத்துள்ளதையும் இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.
டாக்டர் பினாயக் சென்-ஐ விடுவிக்க மத்திய அரசு உடனே ஆவன செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5: தீஸ்தாவுக்கு பாராட்டு
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையையும், சங்பரிவாரத்தின் மனிதகுல விரோத அராஜகங்களையும் அம்பலப்படுத்தியதோடு, அவற்றை ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவின் கவனத்திற்கும் கொண்டு சென்ற தீஸ்தா செட்டல்வாட்டை இப்பொதுக்குழு பாராட்டுகிறது. அவரது முயற்சிகளுக்கு தார்மீக ஆதரவையும் தெரிவிக்கிறது. அதேநேரம், தீஸ்தாவின் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 6 : சிறைவாசிகள் விடுதலை
விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் கைதிகளுக்கு, பொது மன்னிப்பு வழங்கி முன்னதாக விடுதலை செய்வதில் தமிழக அரசு நேர்மையைக் கடை பிடிக்கவில்லை என இப்பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளை வேண்டுமென்றே இந்த அரசு புறக்கணித்து வந்துள்ளது. பல்£ண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் நன்னடத்தை உடையோருக்கு, உடனடியாகப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 7 : பூரண மதுவிலக்கு தேவை
தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளால், மது அடிமைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குடிகாரர்களின் சராசரி வயது 13 என்ற அதிர்ச்சி செய்தி நிலைமையின் விபரீதத்தை உணர்த்துகிறது. சமூக விரோத சாராய வியாபாரத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8 : வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சம்
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கையாகும். தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாரியம் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. கேரளாவில் இருப்பது போல் தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகத்தை தொடங்க வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9 : உருதுமொழிக்கு உத்திரவாதம்
சமச்சீர் கல்வித்திட்டத்தில் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்கள், மொழிப்பாடமாக உருதுவைக் கற்கும் வாய்ப்புப் பறிக்கப்பட்டது. இது சரி செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதியும் காற்றில் பறந்து விட்டது. நடைமுறையில் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உருதுவை மொழிப்பாடமாகப் படிக்க முடியாத சூழலே உள்ளது.
மாநில மொழியான தமிழை ஒரு பாடமாகக் கற்க உருது பேசும் மக்கள் தயாராக உள்ளபோது, தாய்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கற்கும் வாய்ப்பைப் பறிப்பது நியாயமற்றது. உருதுவை மொழிப்பாடமாகக் கற்பதில் தமிழக அரசு ஏற்படுத்திய தடைகளை அகற்ற வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 10: இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை
கிழக்கு தாம்பரம் ரயில்வே காலணியில் 75 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் 'கிரைஸ்ட் தி கிங்' பள்ளிகூடத்தின் இடத்தை ரயில்வே நிர்வாகம் கையப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.
-------------------------------------------------------------------------------------